Wednesday 17 December 2014

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.
16-12-2014 
அன்​று நடைபெற்ற,


சனிப்பெயர்ச்சி தின சிறப்பு ஹோமம் , இலட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனைகள்  இறையருளால்  வெகு சிறப்பாக அடியார்கள் புடைசூழ  வெகுவிமரிசையாக நடந்தேறியது! காலை 8 மணியளவில் ஹோமத்திற்கான கட புறப்பாடு   அருகில் உள்ள ஸ்ரீவிநாயகர் திருக்கோவிலில் இருந்து  முருகனடியார்கள் புடைசூழ புறப்பட்டு , மேளதாளம்  முழங்க, அடியார்களின் திருமுருக நாம கோஷகானத்துடன் கூந்தலூர் முருகன் திருக்கோவில் வந்தடைந்து, சனிபெயர்ச்சி விஷேஷ ஹோம  ஆராதனைகள் இனிதேஆரம்பமாயின.

அடியார் யாவரும் தம் குடும்ப நலம், உற்றார் உறவினர் மற்றும் மக்கள் நலம் பெறவேண்டி., தேடி வரும் அடியார்க்கெல்லாம் வேண்டியது வேண்டியபடி வாரிவழங்கும் கருணைக்கடல் , அடியார்ப்  பிணி நீக்கும் பிறவிஞானவள்ளல் , மனங்கசிந்துருகி கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அருள்ஞானக் குமரனாம்,  கூந்தலூரில் உறையும் எம்பெருமான் திருமுருகக்கடவுள் திரு அருள் நாடி , அவன் திருவுருவை வணங்கி, அவனடிதொழுது,   கிரக பாதிப்புகள் நீங்க, அவர்தம் பிரார்த்தனைகள் எல்லாம் நடத்தித்தர வணங்க வந்துகொண்டிருந்த அடியார் எல்லாம் மனமுருக குமரகுருபரனை தரிசித்து நன்னம்பிக்கையுடன் பரவசம் அடைந்தனர்.

பெருந்திரளான அடியார் யாவரும் ஹோம வேள்வியில் , இலட்சார்ச்சனைகளில் கலந்துகொண்டனர். மதியம் வந்திருந்த அடியார்க்கெல்லாம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மதியம் 2 மணியளவில், ஹோம கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க, அடியார் புடைசூழ திருக்கோவில் பிரகாரம் வலம் வந்தபின், திருமுருகனுக்கும் சனீச்வர பகவானுக்கும் சிறப்பு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து 2.43 மணிக்கு கூந்தலூர்  திருமுருகனுக்கும் சனீச்வர பகவானுக்கும் மேளதாளங்கள்  முழங்க , அடியார்களின் பக்தி முழக்கங்களுடன் நடைபெற்ற மஹா தீபாராதனைக் காட்சியில் , அடியார் யாவரும்   பேரின்பப்  பரவசம் அடைந்தனர். 

பின்னர் அடியார் அனைவரும் பக்திப்பரவசத்துடன்  முருகனையும், சநீச்வரபகவானையும் தரிசித்து வழிபட்டனர்.

மாலை 6 மணிக்கு திருக்கோவிலில், குடந்தை G.காசிநாதன் குழுவினரின் வயலின் இன்னிசை நிகழ்ச்சி அடியாரெல்லாம் இரசித்து மகிழும்வண்ணம் வெகு சிறப்பாக நடந்தேறியது! திரளான அடியார்களின் பங்கேற்பால் நிகழ்ச்சி இரவு 9.30 மணி வரை நீடித்தது. 

விழா சிறக்க உறுதுணை புரிந்த முருகனடியார் அனைவருக்கும் விழாக் குழுனரின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், முருகனைத்தரிசிக்க வந்திருந்த  அடியார் எல்லார்க்கும் முருகனருள் புரிய எமையாளும் கூந்தலூர் முருகன் திருப்பதம் பணிகிறோம்!

நேரில் வர விருப்பம் இருந்தாலும் அவரவர் வாழ்வியல் சூழலால் நேரில் வரவியலா அன்பர்கள், வழிபாட்டில் கலந்துகொள்ள விருப்பம் கொண்டு மொபைல் மூலமாகவும், இமெயில் மூலமாகவும் விவரம் தெரிவித்திருந்த அன்பர்களுக்கு, திருக்கோவில் முருகன் ஹோம இலட்சார்ச்சனை அருட்பிரசாதங்கள் தபால் மூலம் இன்று முதல் அனுப்பப்படுகின்றன.

விரைவில் நேரில் வந்து முருகனை தரிசனம் செய்கிறோம், விழாவினை சிறப்பாக நடத்துங்கள்  என விழா சிறக்க வாழ்த்து சொன்ன அத்தனை நல்லன்பர்கள் யாவருக்கும் திருக்கோவில் விழாக்குழுவினரின் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

முருனருள் யாவருக்கும் கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறோம்!

வருக தரிசனம் செய்க! முருகன் அருள் பெருக!

கூந்தலூர் முருகனுக்கு அரோகரா! 

ஓம் சரவண பவ!